Jothidam, ஜோதிடம்

ஜாதகத்தை வைத்து நல்ல நேரம், கெட்ட நேரம் பார்ப்பது எப்படி?

ஒரு நபரின் ஜாதகத்தை வைத்து, அவருக்கு எப்பொழுது நல்ல காலம் என்பதை மிக சுலபமாக தெரிந்துகொள்ளலாம். அதற்கு அவரின் ஜாதகத்தில் நடப்பு கிரகத்தின் திசை,நடப்பு கிரகத்தின் புத்தி ஆகியவற்றை முதலில் குறித்துக்கொள்ள வேண்டும்.

அந்த திசை, புத்தி இருவரும் ஒருவருக்கொருவர் 6-8 நிலைகளில் இருக்க க்கூடாது. 1-12 நிலையிலும் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அந்த திசையில் அந்த புத்தி நன்மையை செய்யாது. இதுதான் மிக சுலபமாக நல்ல காலம் பார்க்கும் சூத்திரம் (Formula)

இந்த சூத்திரத்தை வைத்து, அடுத்தடுத்து வரும் புத்திகளுக்கும் குறித்துக் கொண்டே வர வேண்டும். அப்பொழுது உங்களுக்கு நல்ல நேரமும், கெட்ட நேரமும் பிடிபட்டு விடும்.

தசா புத்தி பலன்கள்

  • 1.1ம் வீடு, 5ம் வீடு, 9ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடு, 10ஆம் வீடு ஆகிய வீட்டு அதிபதிகளின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும், அவர்கள் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • இவைகள் அனைத்தைவிட, 11ஆம் வீட்டு அதிபரின் தசா அல்லது புத்தி நடைபெற்றால், அவர் ஜாதகத்தில் வலுவாக இருந்தால் மிக நல்ல பலன்கள் கிடைக்கும்.
  • ஜாதகத்தில் உச்சமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். நீசமாக உள்ள கிரகங்களின் தசா அல்லது புத்தி நடைபெற்றால் நல்ல பலன்கள் கிடைக்காது.

கோச்சாரப் பலன்கள்

கோச்சாரத்தில் (in transit) குரு பகவானின் சஞ்சாரம் முக்கியமானது. குருவானவர் சந்திர ராசிக்கு 5ஆம் இடம், 7ஆம் இடம், 9ஆம் இடம், 11ஆம் இடம் ஆகிய இடங்களில் வாசம் செய்யும் காலங்களில் நல்ல பலன்களைத் தருவார்.

1ஆம் இடம், 3ஆம் இடம், 6ஆம் இடம் 4ஆம் இடம் 8ஆம் இடம், 10ஆம் இடம் 12ஆம் இடம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் குரு பகவான் நன்மை செய்ய மாட்டார்.

மூன்றாம் இடச் சஞ்சாரத்தில் குரு பகவான் தீமையான பலன்களைத்தான் நல்குவார்.

குருவின் 3ஆம் இட சஞ்சாரத்தின் தன்மையை விளக்கும் பாடல்

“கேளப்பா குருபதியும் மூன்றிலேறக்
கெடுதிமெத்த செய்வானடா வேந்தன்தானும்

ஆளப்பா அகத்திலே களவுபோகும்

அப்பனே அரிட்டமடா சிசுவுக்குத் தான்

கூளப்பா குவலயங்க ளெல்லாம் ஆண்ட

குற்றமிலாகாந்தாரி மகனும் தானும்

வீளப்பா வீமன் கை கதையினாலே

விழுந்தானே மலைபோல சாய்ந்தான் சொல்லே!”

புலிப்பாணி பாடல்

தசா புத்திதான் மிக முக்கியம். அதற்கு அடுத்துதான் கோசாரப் பலன்கள். ஒருவருக்கு  மேற்குறிப்பிட்ட யாவையும்  ஒரு ஜாதகரின் நல்ல நேரம், கெட்ட நேரம் பார்த்திட உதவும் வழிமுறைகளாகும்.